இலங்கையில் தொழிலாளர் தின விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் 100% மானியத்தில் கட்டப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட கிளெங்கோன் வைத்திய சாலை மருத்துவமனை இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பெரும் சேவை செய்து வருவதாக அண்ணாமலை கூறி உள்ளார்.
தொழிலாளர் தின விழாவில் பங்கேற்ற அண்ணாமலை
தொழிலாளர் தின விழாவில் பங்கேற்ற அண்ணாமலை
Published on

கொழும்பு:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இன்று நுவேரா எலியாவில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

இதுதொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

இலங்கையின் நுவேரா எலியாவில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) மே தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது பிரதமர்  மோடி அவர்கள், தமிழர்களுக்காகவும், இலங்கைக்காகவும் செய்யும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இன்று இங்குக் கூடியிருந்தனர். 

2017ஆம் ஆண்டு மே மாதத்தில் நமது பிரதமர் நுவேரா எலியாவில் இந்திய வம்சாவளி தமிழர்களைச் சந்தித்து அவர்களது அன்பையும் அபிமானத்தையும் பெற்றார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவரை அன்பாக வரவேற்றனர்.

அப்பொழுது, ஏற்கனவே கட்டப்பட்டு வரும் 4,000 வீடுகளைத் தவிர, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 10,000 வீடுகளை நமது மாண்புமிகு பிரதமர் வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்திய அரசாங்கத்தின் 100% மானியத்தில் கட்டப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட கிளெங்கோன் வைத்திய சாலை மருத்துவமனையையும் பிரதமர் டிக்கோயாவில் 2017ஆம் ஆண்டில் திறந்து வைத்தார். தற்போது முழுமையாகச் செயல்படும் இந்த மருத்துவமனை இங்குள்ள இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பெரும் சேவை செய்து வருகிறது. ரம்பொட கலாச்சார நிலையமும் தற்போது முழுமையாக இயங்கி வருகின்றது.

1999-2000 ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் நமது பாரத பிரதமராக இருந்தபோது தொண்டைமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இந்திய அரசின் முழு நிதியுதவியுடன் உயர்தர ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை அனுப்பினார். 

இந்திய அரசாங்கத்தின் முழு நிதி உதவியோடு கட்டப்பட்ட ஹட்டன் நோர்வூட் விளையாட்டு வளாகமும் இங்கு முழு பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது! 

இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com