இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல்.1200 பேரை கொன்று குவித்ததுடன், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
Published on

ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென காசா எல்லையைத் தாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளை பிடித்துக் சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்திய தொடங்கியது. ஏழு மாதங்களாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை தோல்வியும் முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை உயர்அதிகாரிகளும் பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜானாமா செய்யாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று ராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்தின் தலைசிறந்த பாதுகாப்பு அமைப்பை முறியடித்து இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தடுக்க முடியாததற்கு தான் பொறுப்பேற்பதாக தாக்குதல் நடைபெற்ற பிறகு ஹலிவா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் 1200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com