வங்காளதேச வன்முறை: வெளியுறவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வன்முறையில் போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேச வன்முறை: வெளியுறவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Published on

டாக்கா:

வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள் அறிக்கையில், வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேவர வேண்டாம் என்றும், அவசர உதவி என்றால் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com