காசா இனப்படுகொலையால் லாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள் - ஐ.நா. நிபுணர் அதிர்ச்சி அறிக்கை

காசாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்.
காசா இனப்படுகொலையால் லாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள் - ஐ.நா. நிபுணர் அதிர்ச்சி அறிக்கை
Published on

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து லாபம் ஈட்டியதற்காக உலகளாவிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு பிரான்செஸ்கா அல்பனீஸ் அளித்த அறிக்கை, காசாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.

காசாவில் முற்றிலுமாக சிதைந்த நிலையிலும், இஸ்ரேலின் இனப்படுகொலை பெருநிறுவனங்களுக்கு லாபகரமானது என்பதால் தொடர்கிறது என பிரான்செஸ்கா அறிக்கை விளக்குகிறது .

'ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை' என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனப் பிரதேசங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன பங்காளிகளின் ஈடுபாட்டையும், பொருட்களை விற்பனை செய்யும் விவசாய நிறுவனங்களையும், போருக்கு நிதியளிக்கும் முதலீட்டு நிறுவனங்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

அரசியல் தலைவர்களும் அரசாங்கங்களும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அதே வேளையில், ஏராளமான பெருநிறுவனங்கள் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு,  இனப்படுகொலை ஆகியவற்றால் லாபம் ஈட்டியுள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

சிறப்பு அறிக்கையாளர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை வழங்க அல்லது அறிக்கை அளிக்க ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் ஆவர்.

2022 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்கள் குறித்த சிறப்பு அறிக்கையாளராக இருக்கும் இத்தாலிய சட்ட அறிஞரான பிரான்செஸ்கா அல்பானீஸ், காசாவில் இஸ்ரேலிய தாக்குதலை ஒரு 'இனப்படுகொலை' என்று ஜனவரி 2024 இல் முதன்முதலில் உறுதிப்படுத்தினார். இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் 57,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், பல பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும் நம்பப்படுவதால், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com