சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்

களப்பணியாளர்களின் யதார்த்தமான வாழ்க்கையை எழுத்தாக்கியுள்ளார் வாங் ஜிபிங்.
wang jibing
Published on

சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.

நவீன சீன இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் லு சூனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகும்.

லோ பிளைட்

சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்கள், விரக்திகள் மற்றும் சவால்களை மையமாக வைத்து 'லோ பிளைட்' (Low Flight) எனும் கவிதைத் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.

இந்த நூலுக்காக சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களிடம் அவர் உரையாடியுள்ளார்.

6,000 கவிதைகள்

பகலில் உணவு டெலிவரி செய்யும் இவர், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து, ஓய்வு நேரங்களில் 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.

களப்பணியாளர்களின் யதார்த்தமான வாழ்க்கையை எழுத்தாக்கிய இவரது வெற்றி, சீனாவில் தொழிலாளர்களின் இலக்கிய படைப்புகளுக்குக் கிடைத்துவரும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங் ஜிபிங், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இளமையிலேயே பள்ளியிலிருந்து விலகினார். அவர் உணவு டெலிவரி ஊழியராக மாறுவதற்கு முன் கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் என பல்வேறு வேலைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com