சீனாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ: 39 பேர் பலி

கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
சீனாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ: 39 பேர் பலி
Published on

பீஜிங்:

சீனாவின் ஜியாங்சி மாகாணம் யுஷூயி நகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று இந்த வணிக வளாகம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஏரளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.24 மணிக்கு வணிக வளாகத்தில் திடீரென தீப்பிடித்தது.

கட்டிடத்தின் அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வணிக வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வணிக வளாகத்தை விட்டு வெளியே ஓடினர். இருப்பினும் தீப்பற்றிய பகுதிகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.

இதனிடையே தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முராக ஈடுபட்ட நிலையில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் வணிக வளாகத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

இருப்பினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 39 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com