

பெருவின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.5 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 300 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) இரவு 9:24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் மையப்புள்ளி ஹுவான்காயோ மாகாணத்தில் உள்ள சிகாயா நகருக்கு மேற்கே-தென்மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது.
கட்டமைப்பு சேதம்:
காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று பெருவின் தேசிய குடிமை பாதுகாப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உள்ளூர் தேவாலயம் மற்றும் கன்னியர் மடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கட்டமைப்பு சேதமடைந்தன.
உள்ளூர் குடிமை பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் வாஸ்குவெஸ், ஆண்டியன் பகுதியில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட பழமையான களிமண் பொருட்கள் அதிகரித்த பாதிப்புக்கும் சேதத்திற்கும் பங்களித்துள்ளன என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கடும் பாதிப்பு:
பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பெருவில், நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சோங்கோ பாஜோவின் விவசாய பகுதியில், கடுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வெளியே குடியிருப்பாளர்கள் போர்வைகளுக்கு அடியில் பதுங்கியிருந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் விலங்குகளும் காணப்பட்டன.
"என் வீடு அழிக்கப்பட்டுவிட்டது," என்று ஹெர்மெனெகில்டா குவாமலாடோ, தனது மூன்று குழந்தைகளுடன் அண்டை மாகாணமான ஹுவாயுகாச்சியில் தங்குவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தபோது ஒரு உள்ளூர் வானொலியிடம் கூறினார்.
2007-ஆம் ஆண்டில், இகா பிராந்தியத்தில் உள்ள பிஸ்கோ மாகாணத்தை 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது, இதில் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்தனர்.