

ஈரோடு:
திருப்பூர் எஸ்.வி. காலனி வடக்கு நாவலர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39) தொழிலாளி. இவருக்கும் கோபி அடுத்த குளத்துப்பாளையத்தை சேர்ந்த யுவமணிக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
செந்தில்குமார் தற்போது திருமுருகன் பூண்டி அருகே உள்ள செட்டிபாளையத்தில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 12-ந் தேதி மீண்டும் கணவன்-மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு யுவமணி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் செந்தில்குமார் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 13-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற செந்தில்குமார் திடீரென மாயமானார். இந்த நிலையில் மறுநாள் 14-ந் தேதி செந்தில் குமார் தனது தந்தைக்கு போன் செய்து தனக்கு மனசு சரி இல்லை என்றும் தான் பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் பவானிசாகர் வந்து கீழ்பவானி வாய்க்கால் பகுதியை தேடி பார்த்தனர். அப்போது பவானிசாகர் பார்க்கிற்கு தென்புறம் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் செந்தில் குமாரின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.