

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே உள்ள பெரிய சோழிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்தார். இவர் வெளியூருக்கு சென்று ரிக் வண்டியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். நேற்று காலை மது குடிப்பதற்காக கபிலர் மலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு நேற்று இரவு வரை அமர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. செல்வம் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது செல்வம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews