கோபி ஜெயிலில் அடைக்கப்பட்ட தொழிலாளி மரணம்- மாஜிஸ்திரேட்டு விசாரணை

கோபி ஜெயிலில் அடைக்கப்பட்ட தொழிலாளி இறந்தது தொடர்பாக விசாரிக்க ஈரோடு 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உள்ளார்.
கோபி ஜெயிலில் அடைக்கப்பட்ட தொழிலாளி மரணம்- மாஜிஸ்திரேட்டு விசாரணை
Published on

கோபி:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 55). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி நாகம்மா.

இவரின் நடத்தையில் பசுவண்ணாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. கடந்த 14-1-2017 அன்று இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பசுவண்ணா அருகே கிடந்த கல்லை தூக்கி நாகம்மாவின் தலையில் போட்டார். இதில் நாகம்மா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுவண்ணாவை கைது செய்தார்கள்.

இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பசுவண்ணா ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு பசுவண்ணாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

அதன்பேரில் போலீசார் பசுவண்ணாவை தேடி வந்தார்கள். இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கடந்த 6-ந் தேதி கைது செய்தனர். பின்னர் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு, பசுவண்ணாவை 15 நாட்கள் கோபியில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பசுவண்ணாவுக்கு நேற்று மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை ஜெயிலில் இருந்த போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பசுவண்ணா பரிதாபமாக இறந்தார்.

கைதியான பசுவண்ணா இறந்தது தொடர்பாக விசாரிக்க ஈரோடு 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு ரங்கராஜன் இன்று கோபிக்கு வருகிறார்.

பசுவண்ணாவுக்கு எப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது? எப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்? எப்போது இறந்தார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் யார்? என்பது தொடர்பாக அவர் விசாரணை நடத்த இருக்கிறார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com