பெண்கள் தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய தயார்- திருப்பூர் கலெக்டர்

பெண்கள் தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக திருப்பூர் கலெகடர் பழனிசாமி கூறியுள்ளார்.
பெண்கள் தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய தயார்- திருப்பூர் கலெக்டர்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர வங்கியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-

மகளிர் திட்டத்தின் மூலம் பெண்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்காகவும், நிலைத்த வாழ்வாதாரத்தை பெறுவதற்காகவும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்ட மைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் சமுதாயத்தில் சரிநிகராக வாழவேண்டும், வெளிஉலகத்தில் என்ன நடக்கின்றது.அவற்றில் நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொள்வது மட்டுமின்றி தைரியம், தன்னம்பிக்கை இவற்றை வளர்த்து ஆண்களுக்கு இணையாக பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்று வாழவேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நபார்டு வங்கி மூலம் தயாரிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்திற்கான 2018-19-ம்ஆண்டிற்கான வளம் சார்ந்த திட்ட அறிக்கையில் ரிசர்வ் வங்கியின் முன்னோடி கடன் வழிமுறைகளையும், அரசின் திட்டங்களையும், மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, உருவாக்கப்படுகின்ற உட்கட்டமைப்புகள் மற்றும் வங்கிகளின் புள்ளி விவரங்களை கொண்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையின் மூலம் 2022 -ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பது, திறன் மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் மாற்றத்தினை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் தொகைக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.முன்னதாக, நபார்டு வங்கி மூலம் தயாரிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்திற்கான 2018-19-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த திட்ட அறிக்கையை கலெக்டர் பழனிசாமி வெளியிட்டார்.

இக்கூட்டத்தில்,இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சேதுராமன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தர மூர்த்தி, திருப்பூர் மாவட்ட நபார்டு வங்கியின் வளர்ச்சி மேலாளர் ராஜூ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com