சபரிமலையில் பெண்களை வயது வித்தியாசமின்றி அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம் - கேரள மந்திரி
திருவனந்தபுரம்:
சபரிமலையில் வயது பாகுபாடின்றி பெண்களை அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்டில் இன்று நடந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கன்வில்கர் அமர்வு வழக்கை விசாரித்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என கேரள அரசின் சார்பில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ஆண்களை போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என கூறினர்.
இது தொடர்பாக பேசிய, கேரள அறநிலையத்துறை மந்திரி சுரேந்திரன், “சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். சுப்ரீம் கோர்டு இது தொடர்பாக வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். கேரள தேவசம் போர்டு மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது” என கூறினார்.

