உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

3 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
Published on

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு உளுந்தூர்பேட்டையில் உள்ள 2 பெரிய ஏரிகளில் இருந்தும், மட்டிகை கிராமத்தில் ராட்‌ஷத போர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பிரகாஷ் நகர் பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதகாலமாக சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. குடிநீர் கிடைக்காததால் பொது மக்கள் அவதியடைந்தனர். குடிநீர் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்களும் கொடுத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் நகர் பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு, கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் பேரூராட்சி அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, விரைவில் உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com