ராஜாக்கமங்கலம் அருகே பெண் போலீஸ் - பேராசிரியர் வீட்டில் கொள்ளை

ராஜாக்கமங்கலம் அருகே ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பெண் போலீஸ் மற்றும் பேராசிரியர் வீட்டில் புகுந்து கொள்ளையடித்து சென்றனர்.
ராஜாக்கமங்கலம் அருகே பெண் போலீஸ் - பேராசிரியர்  வீட்டில் கொள்ளை
Published on

நாகர்கோவில்:

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வைராக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் சென்னையில் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி சென்னையில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். 

கணவன்-மனைவி 2 பேரும் சென்னையில் பணியாற்றுவதால் அங்கேயே அவர்கள் தங்கியிருக்கிறார்கள். வைராக்குடியிருப்பில் உள்ள வீட்டில் மகேசின் தாயார் மட்டும் வசித்து வந்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரும் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை அவர் ஊருக்கு திரும்பி வந்தார். அங்கு அவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தன. 

ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் நகை, பணம் இல்லாததால் அங்கிருந்த குத்துவிளக்கு, பாத்திரங்களை அள்ளிக் கொண்டு தப்பிச் சென்று இருக்கிறார்கள். 

இதேபோல அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டிலும் பொருட்கள் கொள்ளை போய் உள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் தங்கராஜன். கல்லூரி பேராசிரியர். இவர் தற்போது எள்ளுவிளை பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். வைராகுடியிருப்பில் உள்ள வீடு பூட்டியே கிடந்தது. அங்கும் கொள்ளையர்கள் புகுந்து குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். 

இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்தும் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com