வள்ளியூரில் போலீஸ் நிலையத்தில் பெண் மர்ம மரணம்

வள்ளியூரில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்மமான முறையில் இறந்த லீலாபாய்.
மர்மமான முறையில் இறந்த லீலாபாய்.
Published on

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக கிறிஸ்டோபர் என்பவர் பணியாற்றி வருகிறார். நாகர்கோவிலை சேர்ந்த இவர் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் கிறிஸ்டோபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிந்தனர். தலைமறைவான அவரை பல்வேறு இடங்களில் கூடங்குளம் போலீசார் தேடிவந்தனர். மேலும் அவரது செல்போன் எண்ணை ரகசியமாக கண்காணித்து அதன் பேரிலும் துப்பு துலக்கி வந்தனர்.

அதில் அவரது செல்போனில் இருந்து குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பூமத்திவிளையை சேர்ந்த இஸ்ரவேல் என்பவரின் மனைவி லீலாபாய் (வயது45) என்ற பெண்ணுக்கு அடிக்கடி பேசியது தெரிய வந்தது. எனவே லீலா பாயை பிடித்து விசாரித்தால் கிறிஸ்டோபரை பற்றி தகவல் கிடைக்கும் என கருதினர்.

இதைத்தொடர்ந்து வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் பூமத்தி விளை சென்று விசாரணைக்காக லீலாபாயை வள்ளியூருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் லீலாபாய் இன்று அதிகாலை திடீரென ரத்தவாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து லீலாபாயின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீஸ் விசாரணையின் போது லீலாபாய் திடீரென எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் விசாரணை நடத்தினார். லீலாபாயிடம் விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் விசாரித்தார்.

வள்ளியூர் அனைத்து மகளிர் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி கடந்த மாதம் 21-ந்தேதி முதல் விடுப்பில் உள்ளார். அவருக்கு பதிலாக வள்ளியூர் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அனிதா அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பு வகித்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

லீலாபாய் சாவு குறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது, ‘இரவு 2 மணிக்கு லீலா பாய்க்கு வயிற்று வலி ஏற்பட்டதால் வள்ளியூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் நல்ல நிலையில் இருந்தார். அதன் பிறகு அவரது மகன் தனது வீட்டிற்கு லீலா பாயை அழைத்து சென்றார். அங்கு சென்ற பிறகு லீலாபாய் இறந்துள்ளார்’ என தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com