ஈரோட்டில் பெண் மாவோயிஸ்டு துப்பாக்கி முனையில் கைது - ஆந்திரா போலீஸ் நடவடிக்கை

ஈரோட்டில் ரெயிலில் வந்த பெண் மாவோயிஸ்டு துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவர் மீது ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பல வழக்குகள் உள்ளது.
ஈரோட்டில் பெண் மாவோயிஸ்டு துப்பாக்கி முனையில் கைது - ஆந்திரா போலீஸ் நடவடிக்கை
Published on

ஈரோடு:

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் காக்கர்லா பத்மா (45). மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவர் தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் பதுங்கி இருந்து மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். மாவோயிஸ்டு இயக்கத்தினருக்கு ஆயுதங்களும் சப்ளை செய்தார்.

இதை கண்டு பிடித்த தர்மபுரி மாவட்ட போலீசார் கடந்த 2002-ம் ஆண்டு பத்மாவை கூட்டாளிகளுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர். தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

3 ஆண்டுகள் வரை ஜெயிலில் இருந்த பத்மா 2005-ம் ஆண்டு விடுதலையானார். அதன் பிறகு பெண்கள் உரிமைக்கான போராட்டங்களில் பங்கெடுத்தார். தொடர்ந்து மாவோயிஸ்ட் கொள்கைகளை பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுதல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பத்மா மீண்டும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். அதன்பிறகு தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் பத்மா மீது ஆந்திர மாநிலத்திலும் பல வழக்குகள் உள்ளது. இதற்காக ஆந்திர போலீசாரும் பத்மாவை தேடி வந்தனர். இதற்கிடையே பத்மா கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் ரெயிலில் வருவதாக ஆந்திர உளவு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை உறுதி செய்து கொண்ட ஆந்திர உளவு பிரிவு போலீசார் 20 பேர் கோவை, ஈரோடு உள்பட வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் ரகசியமாக பத்மா வரும் ரெயிலை கண்காணித்து காத்து இருந்தனர்.

ஈரோடு அருகே சிக்னலுக்காக ரெயில் நின்றபோது பத்மா இருந்த பெட்டியில் ஆந்திர போலீசார் அதிரடியாக ஏறி சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றி கொண்டு சென்று விட்டனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட போலீசாரிடம் கேட்ட போது இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தனர்.

கைதான பத்மா மாவோயிஸ்ட் இயக்கத்தில் புரட்சிகர பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர். இது தடை செய்யப்பட்ட இயக்கம் ஆகும். கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பல வழக்குகள் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com