

திருப்பரங்குன்றம்:
மதுரை திருநகரை அடுத்த ஹார்விபட்டி சூறாவளி மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 32). பசுமலையில் உள்ள நர்சரி கார்டனில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா (27). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. சர்வமித்ரன் என்ற மகனும், தீக்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இன்று காலை சுதா வீட்டின் அருகே அவரது தாய் சென்றபோது கதவு திறந்து கிடந்துள்ளது. 2 குழந்தைகளும் அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் உள்ளே சென்று பார்த்த போது சுதா படுக்கையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து திருநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசோக்குமார் வீட்டில் இல்லாததால் அவர் தான் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அசோக்குமார், சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் அவர் மது பழக்கத்துக்கும் அடிமையானதால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று இரவு சுதாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து போலீசார் அசோக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.