

மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஜலேந்திரன். இவரது மனைவி ராணி (வயது 75). நள்ளிரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம வாலிபர் உள்ளே புகுந்தார். ராணியை அந்த வாலிபர் தடியால் தாக்கினார். இதில் ராணி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த ½ பவுன் தாலி சங்கிலியை மர்ம வாலிபர் பறித்து தப்பி ஓடி விட்டார்.
இது பற்றி மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கொலையாளியை பிடிக்க கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், மரக்காணம் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாருக்கு மரக்காணம் கீழ்க்குப்பம் பகுதியில் இறால் பண்ணையில் வேலை செய்து வரும் வடமாநில வாலிபர்கள் மீது முதலில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அங்கு வேலை செய்த 6 வடமாநில வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.
இந்த நிலையில் மூதாட்டியின் கொலை வழக்கில் மரக்காணத்தை சேர்ந்த ஒருவருக்கும், கடலூரை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கடலூரை சேர்ந்த வாலிபரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடலூர் விரைந்தனர். அங்கு முகாமிட்டு அந்த வாலிபரை தீவிரமாக தேடிவருகின்றனர். இதேபோல் மரக்காணத்தை சேர்ந்தவரையும் தேடி வருகின்றனர்.