வேலூர் அருகே புளியமரத்தில் ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி

வேலூர் அருகே புளியமரத்தில் ஆம்புலன்ஸ் மோதி பெண் பலியானார். இந்த விபத்து குறித்து அரியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் அருகே புளியமரத்தில் ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த பெண் ரசியா(வயது32). இவரது உறவுக்கார பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து ரசியா நேற்று அவரை பிரசவத்திற்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் ஒன்றில் அழைத்துச்சென்றார். அவருடன் உறவினர்கள் சிலரும் சென்றனர்.

இந்தநிலையில் ஆம்புலன்ஸ் வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் திருப்பினார். அப்போது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ரசியா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கர்ப்பிணி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அரியூர் போலீசார் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்தில் பலியான ரசியாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com