மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் டாக்டர் பலி

புதுவையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பல் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் டாக்டர் பலி
Published on

புதுச்சேரி:

லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேலு. இவர், புதுவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

இவரது மகள் நந்தினி தேவி (வயது 24). பல் டாக்டரான இவர் புதுவை புஸ்சி வீதியில் உள்ள தனியார் கிளினிக்கில் பணி புரிந்து வந்தார்.

நேற்று மதியம் பணி முடிந்து டாக்டர் நந்தினி தேவி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

ராஜீவ்காந்தி சிலை அருகே வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக நந்தினிதேவி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த நந்தினிதேவி உடல் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

இதனை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். உடல் நசுங்கிய நிலையில் நந்தினிதேவியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே நந்தினிதேவி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

திருபுவனை இந்திரா நகரை சேர்ந்தவர் வினோ பாலன். இவரது மகன் அம்மா தென்னவன். (26). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள டி.வி.எஸ். கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். திருபுவனை - விழுப்புரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட அம்மா தென்னவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று பகல் 12 மணிக்கு அம்மா தென்னவன் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com