

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள எம்.செட்டி அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி மீனாட்சி (வயது 30).
இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். மீனாட்சி தனது கணவரின் வீட்டின் அருகே உள்ள பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அதில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மீனாட்சியின் மாமனார் எல்லப்பன் தனது பெயரில் உள்ள சொத்துக்களை அவருடைய மகள்களின் பெயரில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மீனாட்சி, அவரிடம் சென்று உங்கள் சொத்துக்களை எனது கணவர் சுப்ரமணி பெயரில் எழுதி வைப்பதாக கூறிவிட்டு தற்போது, மகள்கள் பெயரில் எழுதி வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது இதுசம்பந்தமாக இருவருக்கும் வாக்கு வாதம் ஏறப்பட்டது. பின்னர் அங்கிருந்த எல்லப்பன் மற்றும் அவரது மனைவி பாஞ்சாலி, மகள் மீனா ஆகிய 3 பேரும் சேர்ந்து மீனாட்சியை தாக்கி உள்ளனர்.
இதில் காயம் அடைந்த அவரை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மீனாட்சி மாரண்ட அள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மருமகளை தாக்கிய மாமனார் எல்லப்பன், மாமியார் பாஞ்சாலி, நாத்தனார் மீனா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.