புதுவையில் இருந்து மதுரைக்கு மதுபாட்டில் கடத்தல்- டிரைவர் கைது

புதுவையில் இருந்து மதுரைக்கு நூதன முறையில் மதுபாட்டில் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுவையில் இருந்து மதுரைக்கு மதுபாட்டில் கடத்தல்- டிரைவர் கைது
Published on

கடலூர்:

கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் என்ற பகுதியில் வாகன சோதனையில் இன்று அதிகாலை ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த போல் இருந்தது. இதனால் மதுவிலக்கு போலீசார் தூங்கிய நபரை எழுப்புவதற்கு காரின் அருகே சென்றனர்.

ஆனால் இருக்கையில் எந்த நபரும் தூங்கவில்லை. அதற்கு மாறாக தலையணையை அடுக்கி வைத்து, ஒருவர் தூங்குவது போல் தோற்றம் ஏற்படுத்தி இருந்தது தெரிந்தது. இதனால் உஷாரான போலீசார் அதனை அகற்றி பார்த்தபோது அட்டைப் பெட்டி முழுவதும் மதுபாட்டில்கள் இருந்தது.

இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் டிரைவரை மது விலக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் டிரைவர் மதுரை பழங்காநத்தம் சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் 160 மதுபாட்டில்களை மதுரைக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

இதுகுறித்து கடலூர் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் மணிகண்டனை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com