கோவையில் சோலார் பேனல் வசதியுடன் 25 இடங்களில் வை-பை ஸ்மார்ட் மரங்கள்

கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் இளைப்பாறும் பகுதிகளில் ‘ஸ்மார்ட் மரங்களை’ மாநகராட்சி நிர்வாகம் நிறுவி வருகிறது. #SmartCity #SmartTrees
கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் வை-பை ஸ்மார்ட் மரம்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் வை-பை ஸ்மார்ட் மரம்.
Published on

கோவை:

கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் இளைப்பாறும் பகுதிகளில் ‘ஸ்மார்ட் மரங்களை’ மாநகராட்சி நிர்வாகம் நிறுவி வருகிறது.

முதல்கட்டமாக வ.உ.சி. மைதான நுழைவுவாயிலில் சுமார் 20 அடி உயரத்தில் தத்ரூபமான மரத்தை வல்லுநர்கள் வடிவமைத்து வருகின்றனர். இரும்பினாலும், வெளிப்புறத்தில் பைபர் பொருட்களாலும் மரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதைச் சுற்றிலும் நிழற்கூரைகள் அமைத்து சுமார் 30 பேர் அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

முக்கியமாக, இந்த மரத்தில் சோலால் பேனல்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் செல்போன், லேப்டாப் போன்றவற்றுக்கு பயன்படுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க இந்த மரத்தின் மூலம் வை-பை வசதி வழங்கப்பட உள்ளது. மரத்தை சுற்றிலும் 500 மீட்டர் தூரத்துக்கு பொது மக்கள் இலவசமாக வை-பை வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.

மாநகராட்சியுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் ஜே.சி. மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தினர் கூறுகையில், ரூ.12 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த ‘ஸ்மார்ட் மரம்’ பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தங்க நிறத்திலான இலைகள் கொண்டதாக மரம் வடிவமைக்கப்படுகிறது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட வேண்டும் என்பதால் சினிமா கலை இயக்குனர்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அடுத்ததாக காந்திபுரம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் மக்கள் அதிகம் கூடும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் 25 ‘ஸ்மார்ட் மரங்கள்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி. பூங்கா ஸ்மார்ட் மரம் ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனர். #SmartCity #SmartTrees

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com