தங்க சிலைகள் செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி - 100 கிலோ தங்கத்தை பங்கு போட்டது யார்-யார்?

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய 100 கிலோ நகைகளை பங்கு போட்டது யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தங்க சிலைகள் செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி - 100 கிலோ தங்கத்தை பங்கு போட்டது யார்-யார்?
Published on

சென்னை:

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் ஆகிய 2 சிலைகளை செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அறநிலைய துறை பெண் அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த 2 சிலைகளையும் மீண்டும் செய்வதற்காக பொதுமக்களிடமிருந்து கிலோ கணக்கில் தங்கம் நன் கொடையாக பெறப்பட்டது.

100 கிலோ வரையில் பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு தங்கத்தை வழங்கினார்கள். இப்படி பெறப்பட்ட தங்கத்தில் சிறிய குண்டுமணி அளவு கூட சாமி சிலைகளை செய்வதற்கு பயன்படுத்தவில்லை. 100 கிலோ தங்கத்தையும் முறைகேடாக சுருட்டி உள்ளனர்.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி முழுமையாக விசாரித்து வருகிறார்கள்.

முன்னாள் ஆணையாளர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளார். சிலைகளை செய்த வி‌ஷயத்தில் ஆணையாளர் கூறியதைத் தான் நான் செய்தேன் என்று கவிதா கூறி இருக்கிறார்.

இந்த முறைகேட்டில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. அனைவரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய 100 கிலோ நகைகளை பங்கு போட்டது யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்ற பின்னரே சிலை கடத்தல் தொடர்பான வி‌ஷயங்களும், கோவில்களில் நடந்துள்ள முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com