

புதுடெல்லி:
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளது.
இதற்காக 7 வகையான கட்டணங்களை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. விமானங்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன. விமான டிக்கெட்டுகள் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இந்நிலையில், விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி, இணையதளம் வாயிலாக அளித்த பேட்டியின்போது, ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர், சர்வதேச பயணிகள் விமானங்களை குறிப்பிட்ட அளவிற்கு இயக்குவதற்கு முயற்சிப்போம் என்றார்.
மேலும், உள்நாட்டு விமான சேவையை தொடங்கியதற்கும், ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார்.