

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் நேற்று சென்னையில் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய தூத்துக்குடி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங்பதானி கூறியதாவது:-
சேப்பாக்கம் மைதானத்தில் 180 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. கடுமையாகப் போராடியும் அந்த ஸ்கோரை எங்களால் எட்ட முடியவில்லை.
முருகன் அஸ்வின் விளையாடுவது மிக நன்றாக உள்ளது. இந்த சீசன் முழுக்க அவர் எங்களுக்கு மிகவும் சிறப்பான பங்களிப்பு தருகிறார். இதுபோல, எம்.சித்தார்த் பந்து வீச்சில் முடிந்தவரை ஆதரவாக இருக்கிறார். ஒரு குழுவாக நாங்கள் இன்னும் ஒத்துழைக்க வேண்டும். தோல்விகளில் இருந்து பாடம் படித்து, வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது. முதல் போட்டியில் இருந்தே வெற்றி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதனை சரி செய்வோம்.
போட்டி முடியும் நேரத்தில், பந்து வீசுவது மிக சிரமமாக இருந்தது. மழை வந்து நின்ற உடனே போதிய ஓய்வின்றி உடனே மீண்டும் போட்டியை தொடங்கிவிட்டனர்.
ஆடுகளத்தில் ஈரம் நன்றாக காயவில்லை. இதனால் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல கிரிப் கிடைக்கவில்லை. இது வெற்றியை கணிசமாக பாதித்தது. தூத்துக்குடி அணி நன்றாக ஆடினாலும் எங்கள் வெற்றி பாதிக்க, மழையும் ஒரு முக்கிய காரணமாகும்.