

கோவை:
கோவை கந்தேகவுண்டன் சாவடி குட்டிகவுண்டன்பதியை சேர்ந்த மாரிமுத்து (41) என்பவரை 14 பேர் கும்பல் கடத்தி கொலை செய்து புதைத்தனர். 6 மாதங்களுக்கு பின்னர் இது குறித்து விபரம் தெரிந்ததும் போலீசார் பிணத்தை தோண்டி விசாரணை நடத்தினர்.
கொலை தொடர்பாக சுந்தர், முத்துவேல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கொலையான மாரிமுத்து உள்பட 15 பேர் இரிடியம் விற்பனை செய்து வந்தோம். பலமுறை விற்பனை செய்து பணத்தை நாங்கள் பங்கிட்டுகொள்வோம். சம்பவத்தன்று ரூ.1.கோடிக்கு இரிடியம் விற்பனை செய்தோம். இதற்காக பங்கை மாரிமுத்து தரவில்லை.
இதனால் அவரை கடத்திச்சென்று தாக்கி பணம் கேட்டோம். இதில் அவர் இறந்து விட்டார். வேறு வழியில்லாமல் அவரை புதைத்துவிட்டோம் என்றனர்.
மேலும் இரிடியம் எங்கிருந்து எடுக்கப்பட்டது. அதனை யாரிடம் விற்பனை செய்யப்பட்டது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.