டர்பன் டெஸ்டின் போது டி காக் உடன் மோதலில் ஈடுபட்ட வார்னருக்கு அபராதம்

டர்பன் டெஸ்டின் 4-வது நாள் தேனீர் இடைவேளையின் போது, டி காக் உடன் மோதலில் ஈடுபட்ட வார்னருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 75 சதவிகிதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. #DavidWarner #QuintondeKock #AUSvSA
டர்பன் டெஸ்டின் போது டி காக் உடன் மோதலில் ஈடுபட்ட வார்னருக்கு அபராதம்
Published on

துபாய்:

டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 227 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து 417 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. 4-ம் நாள் ஆட்டத்தின்போது தென்ஆப்பிரிக்கா ஒருகட்டத்தில் 136 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது திணறியது. 6-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுவிடுமோ என்ற நிலை உருவானது. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் விரக்தியடைந்தனர். குறிப்பாக வார்னர் அதிக அளவில் அப்செட் ஆனார். மதிய உணவு இடைவேளை - தேனீர் இடைவேளைக்கு இடையிலான 2-வது செசனில் தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்தது. மார்கிராம் 85 ரன்னுடனும், டி காக் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை 20 நிமிடம் என்பதால் வீரர்கள் டிரஸ்ஸிங் அறைக்கு சென்றனர். அப்போது அறைக்குச் செல்லும் வழியில் டி காக் நோக்கி வார்னர் வார்த்தைகைள அள்ளி வீசினார். அவரை ஸ்மித் உள்பட ஆஸ்திரேலிய வீரர்கள் சமாதானம் படுத்தினார்கள். இருந்தாலும் வார்னர் விட்டபாடில்லை. இறுதியில் ஒரு வழியாக சக வீரர்கள் அவரை தள்ளி கொண்டு சென்றனர்.

இதற்கிடையே போட்டி நடுவர்கள் இருநாட்டு வீரர்களிடம் கிரிக்கெட் விளையாட்டின் நன்னடத்தை மான்பை மீறக்கூடாது என்பதை வழியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஐ.சி.சி. தெரிவித்தது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட வார்னர் மற்றும் டி காக் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் ஆய்வு செய்தார். அப்போது இருவர் செய்ததும் குற்றம் என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் வீரர்கள் நன்னடத்தையில் டி காக்கின் செயல் முதல் நிலை விதிமீறல் எனவும், வார்னரின் செயல் இரண்டாம் நிலை விதிமீறல் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க இருவருக்கும் வருகிற இன்று (புதன்கிழமை) பதிலளிக்க வேண்டும் என ஐ.சி.சி. கால அவகாசம் கொடுத்திருந்தது. இந்நிலையில், தன் மீதான தவறை வார்னர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 75 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டதோடு, 3 டீமெரிட் புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது. டி காக் இதுகுறித்து இன்னும் பதிலளிக்கவில்லை. #DavidWarner #QuintondeKock #AUSvSA #ConductBreach #ICC

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com