

சென்னை:
சென்னை பாண்டிபஜார் கோபாலகிருஷ்ணன் தெருவில் புதிதாக அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது.
இங்கு திருச்சியை சேர்ந்த கட்டுமான பணியாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 10 அடி உயரத்துக்கு சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை 9 மணி அளவில் திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
உடனடியாக அங்கிருந்த மற்ற பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் சுவர் இடிந்து விழுந்து நசுக்கியதில் அங்கம்மாள் என்ற பெண் பலியானார்.
இடிபாடுகளில் இருந்து 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள். இவர்கள் அனைவரும் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews