அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு - விமானப்படை முன்னாள் தளபதி உள்பட மூவருக்கு சம்மன்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி உள்ளிட்ட மூவர் ஆஜராக டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. #AgustaWestland #VVIPChopperCase
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு - விமானப்படை முன்னாள் தளபதி உள்பட மூவருக்கு சம்மன்
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதில், விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின்மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை கடந்த 18-ம் தேதி துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இந்த குற்றபத்திரிகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு இந்த வழக்கு வந்த போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின்மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோரை சட்டவிரோத பணப்பறிமாற்ற சட்டத்தின் கீழ் தண்டிக்க போதிய 

ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

வாதங்களை கேட்ட சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், எஸ்.பி தியாகி, கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகிய மூவர் செப்டம்பர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், இடைத்தரகர்களாக செயல்பட்ட கார்லோ ஜெரோசா, கைடோ ஹாஷ்கே, துபாய் வாழ் இந்தியரான ராஜீவ் சக்சேனா ஆகிய மூவருக்கு எதிராக ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com