ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

சென்னை ஆர்.கே நகருக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது
Published on

சென்னை:

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானது.

இதனையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேட்சை வேட்பாளராக சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரன் உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் நின்றனர்.

கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் விஸ்வரூபம் எடுத்தது போன்று இந்த முறையும் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுக்கள் அளித்தன. பணப்பட்டுவாடா புகார் காரணமாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சூழ்நிலை ஏற்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் 21-ந்தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். 

வாக்குப்பதிவை தொடர்ந்து மின்னணு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரியின் பொன் விழா கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. மொத்தம் 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். 

காலை 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 மணி முதலே முன்னணி நிலவரம் தெரியவரும். பகல் 12 மணிக்குள் முழு முடிவு வெளியாகி விடும் என்று கருதப்படுகிறது.

வாக்குப்பதிவு மையத்தை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களும், முகவர்களும், பத்திரிகையாளர் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com