

செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சொர்பணந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 30). விவசாய கூலித் தொழிலாளி.
இவருக்கு, கடந்த ஒரு வாரமாக கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.
டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. இதையடுத்து, நேற்றிரவு செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சின்னதுரை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரத்த மாதிரியை சேகரித்த மருத்துவ குழுவினர், சின்னதுரை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறந்தாரா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.
காய்ச்சலுக்கு விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.