நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

நாமக்கல்லில் விநாயகர் சதுர்த்தியின்போது விற்பனை செய்ய 18 வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. #VinayagarSathurthi
நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
Published on

நாமக்கல்:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 13-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாமக்கல் டவுன், பரமத்தி ரோட்டில் ஏ.டி.சி. டிப்போ அருகில் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பிரபாகரன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ½ அடி முதல் 3 அடி வரை மண் சிலையாகவும், 3 அடிக்கு மேல் 12 அடி வரை கிழங்குமாவு மற்றும் பேப்பர் கூலை கொண்டும் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.

மேலும் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய வாட்டர் கலர் பெயிண்டை கொண்டு பல வண்ணங்களில் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். இங்கு மான் விநாயகர், வேட்டை விநாயகர், கருட விநாயகர், சிங்க விநாயகர் என 18 வகையான விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மண் சிலைகள் குறைந்தபட்சம் 20 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரையிலும், 3 அடிக்கு மேல் 12 அடி வரை உள்ள சிலைகள் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.22 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com