இன்று விநாயகர் சதுர்த்தி விழா: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையல் ரத்து

விநாயகர் சதுர்த்தியான இன்று (சனிக்கிழமை) மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.
Published on

மலைக்கோட்டை:

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்று காலை மலைக்கோட்டை மேல் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கும், கீழே உள்ள மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ வீதம் 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்வது வழக்கம். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அதிகாலை முதலே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் வர தொடங்குவார்கள். இதற்காக இரு நாட்களுக்கு முன்பே கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பச்சரிசி, மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் அவற்றை இருபங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணிநேரம் ஆவியில் வேக வைப்பார்கள்.

இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பெரிய கோவில்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன் காரணமாக மலைக்கோட்டை கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் மெகா கொழுக்கட்டை படையல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடவில்லை. மேலும், விநாயகர் சதுர்த்தியன்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் அலங்கார மின்விளக்குகள் போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com