விழுப்புரம் அருகே வாகன சோதனை: பல லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள்
வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள்
Published on

விழுப்புரம்:

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை விழுப்புரம்- செஞ்சி சாலையில் உள்ள அய்னாபாளைம் என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரி இளநிலை என்ஜினீயர் குகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு பார்சல் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாஷிங்மி‌ஷன், கிரைண்டர், மிக்க்ஷி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஏராளமாக இருந்தன.

இது குறித்து லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், இந்த பொருட்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து டெலிவரிக்காக எடுத்துச் செல்கிறோம். நாங்கள் இந்த பொருட்களை தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வழங்குவதற்காக எடுத்து செல்கிறோம். அவர்கள் ஆன்லைனில் புக் செய்துள்ளனர் என்றனர்.

ஆனால், அதற்கான ஆவணங்கள் பற்றி அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதைத் தொடர்ந்து பல லட்சம் மதிப்பிலான அந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் விழுப்புரம் ஆர்.டி.ஓ. குமரவேலுவிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த பொருட்கள் ஆன்லைனில் புக் செய்யப்பட்டு டெலிவரிக்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com