சங்கரன்கோவிலில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
சங்கரன்கோவிலில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தாலுகா நடுவக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதியதமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் இன்பராஜ் தலைமையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் துணை வட்டாச்சியர் மாரியப்பனிடம்  மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நடுவக்குறிச்சி காலனி பகுதியில் சுமார் 35 வீடுகளில் 100-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மதுக்கடை ஆரம்பிக்கபட்டது. மது வாங்க வருபவர்களால் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் உள்ளது. இது தொடர்பாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அதனால் இப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதுக்கடையை  மூட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில் ஊர் நாட்டாண்மை மாடசாமி, புதியதமிழகம் கட்சி தொகுதி செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகன், காசிப்பாண்டி, சந்திரன், அழகுமணி, மாணவரணி தங்கம்சுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் இது குறித்து மாவட்டநிர்வாகத்திற்கு தகவல் அளித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com