விக்கிரவாண்டி அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் மறியல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பாரபட்சமாக சம்பளம் வழங்கப்படுவதை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் மறியல்
Published on

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் பணியில் ஏராளமான கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினக் கூலியாகவும், மாத கூலியாகவும் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சமீபகாலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாரபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இன்று காலை தொரவி கிராமம் அருகே விழுப்புரம் - திருக்கனூர் சாலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுமார் 100 பேர் திடீரென திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், ரமேஷ் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பன்ட ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விக்கிரவாண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவாலி, நாராயணன் ஆகியோரும் விரைந்து வந்து இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன் பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com