8 போலீசார் சுட்டுக்கொலையில் விகாஸ் துபேவுக்கு உதவி: விசாரணை வளையத்திற்குள் 200 போலீசார்

உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொள்ள விகாஸ் துபேவுக்கு ஏராளமான போலீசார் உதவியாக இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் போலீசார்
என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் போலீசார்
Published on

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி  டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.

போலீசார் வரும் தகவல் ஏற்கனவே விகாஸ் துபேயுக்கு தெரிந்துள்ளது. இதனால் போலீசாரை கூட்டாளிகளுடன் சேர்ந்து சுட்டு வீழ்த்த திட்டம் தீட்டினான். போலீசார் கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் அவர்களை ஒரு இடத்தில் தடுக்க வேண்டும் என்று ஜேசிபி-களை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்தான்.

போலீசார் அந்த இடத்தை அடைந்ததும், ஜேசிபி குறுக்கே நிறுத்தப்பட்டதால் வாகனத்தில் இருந்து இறங்கினர். அப்போது வீட்டின் மாடிகளில் தயாராக இருந்த கும்பல் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். சுதாரித்த போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.

என்றாலும் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 பேர் போலீசார் உயிரிழந்தனர். இரண்டு ரவுடிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தை உலுக்கியது.

போலீசார் 40-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து விகாஸ் துபே கூட்டாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். விகாஸ் துபேயின் கூட்டாளிகளில் ஒருவரை மட்டுமே போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது காவல் நிலையத்தில் இருந்து தகவல் வந்ததாக தெரிவித்தார். மேலும் உள்ளூர் நபர்களும் விகாஸ் துபேவுக்கு தகவல் கொடுத்தனர் என்றார்.

இதனால் விகாஸ் துபேயுடன் தொடர்புடைய போலீசார்கள் யார்? யார்? என்ற தகவலை சேகரித்து வருகின்றனர். இதுவரை 10 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், 200 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே இரண்டு பா.ஜதான எம்.எல்.ஏ.-க்களுக்கு விகாஸ் துபேயுடன் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அவர்கள் மறுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com