ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை- குறுக்கு விசாரணையில் விஜயபாஸ்கர் தகவல்

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை தான் என குறுக்கு விசாரணையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக, சசிகலாவின் வக்கீல் தெரிவித்தார். #Vijayabaskar #Rajasenthurpandian
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அமைச்சரவை கூடியது உண்மை- குறுக்கு விசாரணையில் விஜயபாஸ்கர் தகவல்
Published on

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

ஆணையத்தில் விஜயபாஸ்கர் என்ன சொன்னார்? என்பது பற்றி ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாங்கள் குறுக்கு விசாரணை நடத்தியபோது பல்வேறு கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை கிடைத்தது.

அவர் கூறும்போது ஜெயலலிதாவை டிரக்கியாஸ்டமி சிகிச்சைக்காக 7.10.2016 அன்று அழைத்து சென்ற போது தன்னை கடந்துதான் ஸ்டிரெச்சரில் ஜெயலலிதாவை கொண்டு சென்றதாகவும், நான் அவரை மிக அருகில் பார்த்தேன் என்றும் சாட்சியம் அளித்தார்.

விஜயபாஸ்கரிடம் எனது தரப்பிலும், அப்பல்லோ தரப்பிலும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல விஷயங்களை அவர் தெளிவாக பதிவு செய்தார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே என்ன சொல்லி இருந்தார். இவர் என்ன சொன்னார்? என்பதற்கும் பதில் கிடைத்தது.

டாக்டர் பாபு மனோகரன் சாட்சியம் அளித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் 7.10.2016 அன்று ஜெயலலிதாவை பார்த்ததாக கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு, மருத்துவர் சொல்லி உள்ளார் என்றால் அது சரியாகத்தான் இருக்கும் என்று விஜயபாஸ்கர் கூறினார்.

29.12.2016 அன்று சசிகலாவை, ஓ.பன்னீர் செல்வம் உள்பட முழு மனதாக எல்லோருமே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள் என்ற விவரம், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதலில் நடைபெற்றபோது எதிர்தரப்பினர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து பிரசாரம் செய்தார்கள் என்பது உள்பட பல வி‌ஷயங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் அடுக்கடுக்காக சொன்னார்.

எய்ம்ஸ் டாக்டர்கள் என்ன செய்தார்கள், என்ன மாதிரி சொன்னார்கள் என்பது பற்றியும் பேசினார். நான் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல கேள்விகள் கேட்டேன்.

கேபினட் மீட்டிங் (அமைச்சரவை கூட்டம்) நடந்ததா? யார் தலைமையில் நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம் என்றார்.

அன்றைக்கு 2-வது இடத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வமும், 3-வது இடத்தில் இருந்த திண்டுக்கல் சீனிவாசனும், எடப்பாடி பழனிசாமியும் அங்கு இருந்தார்களா? என்று கேட்டதற்கு ஆமாம், எல்லோரும் இருந்தார்கள் என்று பதில் அளித்தார்.

இதே கருத்தைத்தான் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கொடுத்த கடிதத்திலும் தெளிவாக உள்ளது.

19.10.2016 அன்று கேபினட் மீட்டிங் நடைபெற்றது. எல்லா அமைச்சர்களும் சேர்ந்து அம்மாவுக்காக பிரார்த்தனை செய்து அவர் விரைவில் பூரண நலம் பெற்று முதல்வராக பணி தொடரவேண்டும் என்று போட்ட தீர்மானத்தையும் சொன்னார்.

அந்த கேபினட் மீட்டிங்கிலும் ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாராவது ஜெயலலிதாவை வெளிநாடு சிகிச்சைக்கு கொண்டு போவது பற்றி பேசினார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் அந்த மாதிரி எதுவும் பேசவில்லை. அந்த மாதிரி சூழ்நிலை எதுவும் எழவில்லை என்று கூறினார்.

கேபினட் மீட்டிங்கை யார் கூட்டியது? இதற்கான நடைமுறை என்ன? என்று கேட்டதற்கு பொதுத்துறையிடம் இருந்து எல்லோருக்கும் கடிதம் வரும் என்றார்.

பொதுத்துறை எப்படி கடிதம் அனுப்புவார்கள் என்று கேட்டதற்கு, தலைமை செயலாளர்தான் கடிதம் எழுதி அதை நடைமுறைப்படுத்துவார் என்பதை விஜயபாஸ்கர் தெளிவுபடுத்தினார். இப்படி பலதரப்பட்ட வி‌ஷயங்களை தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை 2017 மார்ச் மாதம் 5, 6-ந்தேதிகளில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒரு கமி‌ஷன் வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட வி‌ஷயத்தில் அவர் சொன்ன பேட்டியில், ‘தம்பி விஜயபாஸ்கர், விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உன்னைத்தான்பா முதன் முதலில் விசாரிக்கவேண்டும். அதில் முதல் குற்றவாளியா நீதான் இருப்பாய்’ என்று சொன்ன வீடியோ பதிவு பற்றியும், அதற்கு அப்போது விஜயபாஸ்கர் கூறிய பேட்டியில் ‘கமி‌ஷன் போடும்போது முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைதான் விசாரிப்பார்கள்’ என்று கூறிய பேட்டி பற்றியும் விஜயபாஸ்கரிடம் கேட்டேன். அதற்கு அவர் இந்த பேட்டியும் உண்மை. அந்த பேட்டியும் உண்மை என்று கூறினார்.

உடனே நான் இதுவும் உண்மை, அதுவும் உண்மை என்றால் எது சரியானது என்று கேட்டேன். அதற்கு அவர் கருத்து சொல்ல விருப்பமில்லை என்றார்.

நீங்கள் கருத்து சொல்ல விருப்பம் இல்லாததற்கு 29.8.2017-ல் இருந்து இப்போது துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் உங்கள் அமைச்சரவையில் இருக்கிறாரே? அதுதான் காரணமா? என்று கேட்டேன். அதற்கும் கருத்து சொல்ல விருப்பம் இல்லை என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக காழ்ப்புணர்ச்சியோடு தான் அவர் செயல்பட்டார். எல்லாம் அறிந்து கொண்டும், தெரிந்துகொண்டும் மருத்துவ சிகிச்சை பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அவர் மறைத்து சொன்னார் என்பது போன்ற பல வி‌ஷயங்களை விஜயபாஸ்கர் வாயிலாகவே நான் சாட்சியமாக வாங்கி இருக்கிறேன்.

விஜயபாஸ்கர் இதற்கு ஒத்துழைத்தார் என்று சொல்ல முடியாது. மிக கடினமாக பல கேள்விகளை போட்டு அதில் இருந்து கிடைக்க கூடிய பதில்களை வைத்து எங்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் ஆதாரங்களை உருவாக்க உள்ளேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com