

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு காரில் திருமலைக்கு வந்தார்.
அவர்கள், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருமலையில் உள்ள வராகசாமி கோவில், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து நடந்தே பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்றனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமலைக்கு வந்ததையொட்டி, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது. முன்னதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குச் சென்று பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பொன்னாடை போர்த்தினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி சென்றார். அங்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பொன்னாடை அணிவித்தபோது எடுத்த படம்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் நடந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி சாமி தரிசனம் செய்த காட்சி.
ஏழுமலையானின் ஆசியுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று காலையில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள் ஆலய அர்ச்சகர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.