ஒரு தொழில் அதிபராக போராடி தோற்று விட்டேன்- சித்தார்த்தா எழுதிய உருக்கமான கடிதம்

ஒரு தொழில் அதிபராக போராடி தோற்று விட்டேன் என்று கஃபே காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா எழுதிய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
விஜி சித்தார்த்தா
விஜி சித்தார்த்தா
Published on

கஃபே காபி டே  நிறுவனர் விஜி சித்தார்த்தா நேற்று (திங்கள் கிழமை) இரவு முதல் மாயமானார். காரில் நேத்ராவதி நதி வரை சென்ற அவர் திடீரென காரை விட்டு இறங்கிச்சென்று மாயமானார். உடன் வந்த காரின் ஓட்டுநர், சித்தார்த்தாவை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாயமான விஜி சித்தார்த்தாவை தேடும் பணி நேத்ராவதி ஆற்றில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜி சித்தார்த்தா கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் ஆவார்.

விஜி சித்தார்த்தாவை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தனது நிறுவன ஊழியர்களுக்கு விஜி சித்தார்த்தா கடிதம் எழுதியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தற்கொலை முடிவை கடந்த சனிக்கிழமையே சித்தார்த்தா எடுத்து விட்டது அவர் எழுதியுள்ள உருக்கமான கடைசி கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் எழுதி இருப்பதாவது:-

நமது நிறுவன போர்டு இயக்குனர்களுக்கும் மற்றும் காபி டே குடும்பத்தினருக்கும் நான் எழுதி கொள்வது.

அனைத்தையும் நான் இழந்து விட்டேன் என்பதை சொல்லி கொள்ள நினைக்கிறேன். என்னை நம்பி இந்த தொழிலுக்கு வந்த அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீண்ட நாட்களாக நான் நிதி நெருக்கடியில் போராடினேன்.

நான் விற்பனை செய்த பங்குகளை திரும்ப பெற கோரி மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியை என்னால் தாங்கி கொள்ள இயலவில்லை. கடன் கொடுத்த மற்றவர்களும் என்னை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள்.

இதற்கிடையே வருமான வரித்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியின் மூலமும் நான் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அவரால் நம்முடைய தொழில் நுட்ப நிறுவனத்தின் பங்குகள் 2 தடவை முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து காபி டே நிறுவனத்தின் பங்குகளையும் கையகப்படுத்துகிறார்கள்.

வருமான வரித்துறை கூறியதை செலுத்திய பிறகும் நமது நிறுவன பங்குகளை தொடர்ந்து முடக்கி விட்டனர். இது நியாயமற்றது. இதனால்தான் நமது நிறுவனங்களில் கடும் நிதி நெருக்கடி உருவாகி விட்டது.

இனி புதிய நிர்வாகத்தின் கீழ் நீங்கள் அனைவரும் மிக வலிமையோடு தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என்று இதயபூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். நமது நிறுவனத்தில் நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் மட்டுமே பொறுப்பாகும். ஒவ்வொரு நிதி பரிமாற்றத்துக்கும் நானே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்.

என்னுடைய குழு, தணிக்கையாளர்கள் மற்றும் நிறுவனத்தின் மூத்த உறுப்பினர்கள் ஒருவருக்கு கூட எனது நிதி பரிமாற்றம் பற்றி தெரியாது. எனவே இந்த விவகாரத்தில் சட்டத்துக்கு நான் மட்டுமே பொறுப்பாவேன்.

நமது நிறுவனங்களில் நடந்த நிதி பரிமாற்றம் மற்றும் நிதி நெருக்கடி போன்ற விவரங்களை எனது குடும்பத்தினர் உள்பட அனைவரிடமும் நான் தெரியாமல் மறைத்து விட்டேன். யாரையும் ஏமாற்ற வேண்டும் என்றோ அல்லது தவறாக வழி நடத்த வேண்டும் என்றோ நான் விரும்பவில்லை.

ஒரு தொழில் அதிபராக நான் போராடி தோற்று விட்டேன். இதை உங்களுக்கு நான் தெளிவாக உணர்த்தி விட்டேன். என்றாவது ஒருநாள் இதை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டு என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த கடிதத்துடன் நமது நிறுவனங்களின் சொத்துக்கள், அவற்றின் மதிப்புகள் அனைத்தையும் தனித்தனியாக மதிப்பீடு செய்து கொடுத்துள்ளேன். அதன்படி ஒவ்வொருவருக்கும் நமது கடனை மற்றும் பங்குகளை திருப்பி கொடுக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com