வேப்பூர் அருகே வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

வேப்பூர் அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வேப்பூர் அருகே வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
Published on

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ரெட்டாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயராமன் வேப்பூரில் புதிதாக வீடு ஒன்றை கட்டினார். அதன் பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் சில நாட்கள் வேப்பூரிலும், சில நாட்கள் ரெட்டாகுறிச்சியிலும் தங்கி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு ஜெயராமன் வேப்பூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் ரெட்டாக்குறிச்சிக்கு சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் ஜெயராமன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இன்று காலை வேப்பூரில் உள்ள வீட்டுக்கு சென்ற ஜெயராமன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. உடனே பீரோ இருந்த அறைக்கு ஜெயராமன் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை-பணம் கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இது குறித்து ஜெயராமன் வேப்பூர் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை கொள்ளையடித்து கொண்டு சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com