

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் மானாவாரி நிலத்தில் பயிரிடும் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் தற்போது
மானாவாரி நிலத்தில் பருத்தி மற்றும் மக்காசோளம் பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டு பருத்தி போதிய விலை விற்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு
உள்ளதால், இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பருத்தி பயிரிடுவதை குறைத்து மக்காச்சோளத்தை அதிக அளவில் பயிரிட்டு உள்ளனர்.
தற்போது சுமார் 4 அடி முதல் 5 அடி உயரம் வரை மக்காச்சோள பயிர்கள் வளர்ந்து உள்ளன. மேலும் கதிர் வரும் தருவாயில் இருப்பதால் அதிக
அளவில் குருத்துப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
இதனால் விவசாயிகள் குருத்துப்பூச்சியினை கட்டுப்படுத்த விசைத் தெளிப்பான் மற்றும் பேட்டரி தெளிப்பான் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து வருகின்றனர். 5 அடி உயரம் வளர்ந்துள்ள மக்காச்சோள பயிரினுள் புகுந்து மருந்து தெளிப்பதற்கு மிகுந்த சிரமமாக இருப்பதால் டிரோன் எனப்படும் பறக்கும் விசைத்தெளிப்பானை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென வேப்பந்தட்டை தாலுகா பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.