

அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே மணலூர் சாஸ்திரி நகரை சேர்ந்த சந்திரகாசன் மகன் சுந்தர் (வயது 33).இவர் பசுபதி கோவிலில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடைநிலை ஊழியராக (அட்டெண்டர்) வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சரபோஜி ராஜபுரம் மெயின் ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.