வீராணம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது

வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு இன்று தண்ணீர் வரத்து குறைந்து 80 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. #VeeranamLake
வீராணம் ஏரி நிரம்பி இருக்கும் காட்சி.
வீராணம் ஏரி நிரம்பி இருக்கும் காட்சி.
Published on

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் வீராணம் ஏரியின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்படுகிறது. கடந்த டிசம்பர் 27-ந்தேதி வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.

இதற்கிடையில் கடந்த 9-ந்தேதி 46.75 அடியாக ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இதையடுத்து விவசாயத்துக்காகவும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் கடந்த 15-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த 18-ந் தேதி வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை மீண்டும் எட்டியது. இந்த நிலையில் நேற்று வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று தண்ணீர் வரத்து குறைந்து 80 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்த போதிலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 47.50 அடியாக உள்ளது.

ஏரியில் இருந்து விவசாயத்துக்கு 117 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக தொடர்ந்து 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #VeeranamLake

X

Maalai Malar
www.maalaimalar.com