வேடசந்தூர் அருகே கணவரை அடித்து கொன்ற மனைவி கைது

வேடசந்தூர் அருகே குடும்ப பிரச்சினையில் கணவனை அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கொலை
கொலை
Published on

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள மல்லப்புரம் கிராமம் மோளக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் பாலன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு செல்லம்மாள் (35) என்ற மனைவியும், யுவராஜ் (14), வெள்ளியங்கிரி வாசன் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாலனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் இவரது மனைவி செல்லம்மாள் கணவனை சத்தம் போட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு இருவருக்கும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த செல்லம்மாள் உருட்டுக் கட்டையால் கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் பாலன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பாலனின் தாய் பழனியம்மாள் சத்தம் போட்டார். அவர்கள் இருவரையும் வெளியே தள்ளி விட்டு செல்லம்மாள் வீட்டுக்குள் சென்று விட்டார்.

காலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லலாம் என்று பழனியம்மாள் தனது மகனை பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். உடனே அதிர்ச்சியடைந்து இது குறித்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பாலன் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்லம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com