

வேடசந்தூர்:
வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்
முத்துச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் முன்னிலை
வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், இ-பாஸ் முறையை ரத்து செய்து பொது போக்குவரத்தை தொடங்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 500-ம், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் நிவாரணமாக வழங்குவதுடன் ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும்
ஊரடங்கு முடியும் வரை இலவசமாக வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி திட்ட பணியாளர்களுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பன
உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல், சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கம்பிளியம்பட்டி, சாணார்பட்டி, கொசவபட்டி, அஞ்சுகுளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.