வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபர் சிக்கினார்

வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்.
பார்த்தசாரதி
பார்த்தசாரதி
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர், மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் தொடர்ந்து கடல்பகுதிகளை கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்.

வேதாரண்யம் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு வாலிபர், கள்ளிமேடு செல்லும் பஸ்சில் சென்றார். அவர் மீது மற்ற பயணிகளுக்கு சந்தேகம் எழுந்ததால் இதுபற்றி வேதாரண்யம் கியூ பிராஞ்சு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த வாலிபர் இலங்கை காங்கேசன் துறைமுகம் அருகே வெல் வெட்டு துறையை சேர்ந்த அருளானந்தசாமி மகன் பார்த்தசாரதி (வயது40) என்று தெரிய வந்தது.

மேலும் அவரிடம் பாஸ்போர்ட், மற்றும் விசா இல்லாததால் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் கஞ்சா வாங்குவதற்காக மேலும் 2 பேருடன் கடல் வழியாக வேதாரண்யம் மணியன்தீவுக்கு வந்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கூட்டாளிகள் 2 பேரும் சென்று விட்டனர். இதனால் பஸ்சில் வந்த பார்த்தசாரதி மட்டும் போலீசாரிடம் சிக்கி கொண்டது தெரிய வந்தது.

தொடர்ந்து பிடிபட்ட இலங்கை வாலிபர் பார்த்தசாரதியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com