வத்தலக்குண்டு அருகே சப்-இன்ஸ்பெக்டரை கடத்திய மாவோயிஸ்டுகள்?

வத்தலக்குண்டு அருகே மாயமான சப்-இன்ஸ்பெக்டர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வத்தலக்குண்டு அருகே சப்-இன்ஸ்பெக்டரை கடத்திய மாவோயிஸ்டுகள்?
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 44). இவர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 26-ந் தேதி திண்டுக்கல் கோர்ட்டுக்கு சென்ற பாண்டி அதன் பின்பு பணிக்கு திரும்பவில்லை.

வீட்டுக்கும் செல்லாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மீனாட்சி பட்டிவீரன் பட்டி போலீசில் புகார் அளித்தார். திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டு இருந்த பாண்டியின் மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது செல்போன் மற்றும் கடிதம் சிக்கியது. அதில் நான் மன உளைச்சலில் இருப்பதால் வெளியே செல்கிறேன். யாரும் தேட வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் தனிப்படை அமைத்து தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மாவோயிஸ்டு தேடுதல் தொடர்பான வழக்குகளில் அதிகமாக ஈடுபட்டு வந்தார். எனவே அவர்கள் பாண்டியை கடத்தி இருப்பார்களா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவருடைய உறவினர்கள் தர்மபுரியில் இருப்பதால் அங்கு சென்றாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com