

கண்டமங்கலம்:
புதுவை மாநிலம் திருவண்டார் கோவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பெண்கள் வேலைப் பார்த்து வருகிறார்கள். அவர்கள் நிறுவனத்தினர் வேன் மூலம் வேலைக்கு அழைத்து வருவது வழக்கம்.
அதேபோல் இன்று காலை அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வேன் வானூர் மற்றும் காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த 15 பெண்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டு இருந்தது.
அந்த வேனை டிரைவர் மணிகண்டன் (வயது 28) என்பவர் ஓட்டினார். அந்த வேன் கண்டமங்கலம் அருகே உள்ள வனத்தாம்பாளையம்- ராசபுத்திரபாளையம் இடையே வந்து கொண்டிருந்தது.
அந்த வேனின் பின்னால் அதிவேகமாக ஒரு வாகனம் வந்து கொண்டு இருந்தது. அந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை சாலையோரமாக ஓட்டினார். அப்போது எதிர் பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் வேனின் இடிபாட்டுக்குள் சிக்கிய வேன் டிரைவர் மணிகண்டன் மற்றும் 15 பெண்களும் படுகாயம் அடைந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர்களை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து காயம் அடைந்த 16 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை மற்றும் கண்டமங்கலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.